வெள்ளி, ஏப்ரல் 14, 2006

தாவோ டெ சிங் - முன்னுரை

பள்ளியில் படிக்கும் போது முதன் முறையாக 'ஸென்' புத்த கதைகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பின்பு கல்லூரியில் படிக்கும் போது 'தத்துவங்களை'ப் படிக்கும் ஆர்வம் அதிகரித்தது. லாவோ -ட்ஸேயின் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்ததும், அந்த தத்துவம் ‘ஒரு மாதிரி புரிந்தும் புரியாமல் இருக்கிறதே’ என்று தோன்றியது. வருடங்கள் செல்லச் செல்ல இந்த தத்துவார்த்தமான எழுத்துக்களைப் புரிந்து கொள்வது, நம்முடைய அனுபவத்தையும், வளர்ச்சியையும் பொறுத்துத்தான் என்று புரிந்தது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு தாவோ டெ சிங் - வழியும் அதன் மேன்மையும் என்று பொருள் வரும். சுருக்கமாக 'வழி' என்றே இங்கு குறிப்பிடுகிறேன்.

முக்கியமாக 'வழி' தத்துவத்தைப் புரிந்து கொள்ள மூன்று முக்கியத் தடைகள். முதலாவது மொழிப் பிரச்சனை. எனக்கு சீன மொழி தெரியாது - படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகள் தான். இரண்டாவது, சீன கலாச்சாரம், முக்கியமாக லாவோ -ட்ஸே வாழ்ந்த காலத்து கலாச்சாரம், தெரியாது. மூன்றாவது என் அனுபவ, அறிவுப் பற்றாக்குறை. இந்த மூன்று தடைகளும் இன்றும் எனக்கு இருக்கிறது; ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த அளவுக்கு இல்லை.

இன்றைக்கும் சீன மொழி தெரியாது; அதை சமாளிக்க கிட்டத்தட்ட பனிரெண்டு அல்லது பதினைந்து மொழிபெயர்ப்புகளைப் படித்திருப்பேன். சீன கலாச்சாரத்தைப் பற்றி முன்பிருந்ததை விட கொஞ்சம் அதிகம் தெரியும். அனுபவங்களும் அதிகம் - அறிவும் வளர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் தத்துவங்களைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வழி – இது பற்றித் தெரிந்தவர்களோடு பேசுவது தான். கருத்துப் பறிமாற்றத்திற்கு இன்னாளில் இணையத்தை விட சுலபமான வழி உண்டா என்ன? அதோடு தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம். ஆகவேதான் இந்த முயற்சி. நான் புரிந்து கொண்ட 'வழி' தத்துவத்தை தமிழில் தர எண்ணம் - இணையத்தில்.

இது ஒரு மொழிபெயர்ப்பு என்று சொல்ல தயக்கம் - மூல மொழியே தெரியாத போது எப்படி மொழிபெயர்க்க முடியும்? நான் படித்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை, பதிவுகளை தந்திருக்கிறேன். தமிழில், கொஞ்சம் வசனம் கலந்து எழுதிய கவிதைகள் (திருவிளையாடலில் தருமி சொன்னது போல: 'கொஞ்சம் வசன நடையிலே' எழுதியிருக்கிறேன்) - எனக்குப் புரிந்த, 'வழி'! மொத்தம் 81 அத்தியாயங்கள் - வாரம் ஒன்றாக, பிரதி சனிக்கிழமை தோறும். அத்தோடு அந்தத் தத்துவங்களை ஒத்த கருத்துகள் எனக்கு தெரிந்த இந்து மத நூல்களில் இருந்து.

உங்கள் கருத்துக்களையும் குறிப்புகளையும் எதிர் பார்க்கிறேன்; அவை 'வழியை' இன்னும் புரிந்து கொள்ள உதவும் என்ற ஆர்வத்தோடு. முதல் பதிவு நாளை - சித்திரை இரண்டாம் நாள் - பதிய எண்ணம்.

லாவோ -ட்ஸே பற்றி நிறைய எழுதலாம். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த அவரைப் பற்றி நிறைய புத்தகங்கள் வந்திருக்கின்றன, இணையத்திலும் விஷயங்கள் உண்டு. மாதிரிக்கு ஒரு இணையம். 'வழி' முடிந்தவுடன் அவரைப் பற்றி ஒரு பதிவு எழுத எண்ணம்.

அன்புடன்,
ரங்கா.

2 Comments:

At 5:35 PM, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல தொடக்கம் ரங்காண்ணா

 
At 9:17 AM, Blogger ரங்கா - Ranga said...

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி குமரன்.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home