சனி, மே 13, 2006

'வழி' – 5

5. இயற்கையின் நியதி

பேதங்கள் அற்றது இயற்கையின் நியதியதை
பாதிப்பது இல்லை பொருட்களின் தோற்றங்கள்

பேதங்கள் அற்றது அறிந்தவர் உள்ளமதை
பாதிப்பது இல்லை மனிதத் தோற்றங்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும் விரிந்திருக்கும் இவ்வியற்கை
வண்ணத்தில் மாறினாலும் விதிமுறைகள் மாற்றாது

மாற்றங்கள் இருந்தாலும் தன்னிலை குலையாது
வெற்றிடமே ஆனாலும் கொடுக்கத் தயங்காது

ஏசாமல் இயங்கும் இயற்கையின் நலம்போல்
பேசாமல் அறிந்தவர் கைவிடார் மூலமதை.

**********

பாரபட்சமில்லாமல் இருப்பது என்பது அரிது. பிடித்தது என்று ஒன்று பொருள் வந்துவிட்டால் அதன் எதிர்மறைப் பொருள் பிடிக்காதாகி விடுகிறது. உதாரணம்:- தித்திப்பு பிடிக்கும்; கசப்பு பிடிக்காது. இரண்டும் சுவைதான் என்று பக்குவத்தோடு பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம். பிடித்ததை அதிகம் பெற வேண்டும் என்பதும், பிடிக்காததை விலக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே வந்து விடுகிறது.

இதையெல்லாம் தாண்டி ஒரு பாரபட்சமில்லாத விதியாக இயற்கை இருக்கிறது. ஈர்ப்பு சக்தி எல்லாப் பொருளின் மீதும் விழுகிறது; பாரபட்சமில்லாமல் ஈர்க்கிறது. சூரியன் பிடிக்கும் - பிடிக்காது என்று பார்த்து பூமியை ஈர்ப்பதில்லை.

இது போல் பாரபட்சமில்லாமல் இருப்பதால் தான் இயற்கையின் நியதி எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது. கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகிறது: 'காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே; கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே; காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே'.