சனி, ஜூன் 03, 2006

'வழி' – 8

8. நீரும் உயர்வும்

உயர்வானவை இவ்வுலகில் நீரைப்போல்
பயன்தரும் எவ்வுயிர்க்கும் போரிடாமல்

நாம்தயங்கும் இடத்திற்கும் சென்றடையும்
இதுவேதான் பரப்பிரும்மம் குணமுமாகும்.

வசிப்பதின் உயர்வு நிலத்திலே
யோசிப்பதின் உயர்வு ஆழத்திலே

கொடுப்பதின் உயர்வு நேரத்திலே
வாக்கின் உயர்வு உண்மையிலே

அரசின் உயர்வு சுயத்திறனிலே
செயலின் உயர்வு திறமையிலே

உயர்வின் அர்த்தம் புரிந்ததனாலே
அயர்வின்றி நித்தம் வாழுகின்றானே

போட்டியிடும் எண்ணம் இல்லாததாலே
ஈட்டிகளும் அவனைத் தீண்டுவதில்லையே.

**********

பாரபட்சமின்றி பயன் தரும் குணம் உயர்ந்தது. நீர் எப்படி எல்லோருக்கும் உதவுகின்றதோ அது போல அறிந்த ஞானிகளும் எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர்கள்.

இந்த அத்தியாத்தில் பல விஷயங்களுக்கும் உயர்வின் அடையாளத்தை விளக்கியுள்ளார். திருக்குறளிலும் இது போல விவரங்கள் உண்டு (உ.ம். காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- குறள் 102).

உயர்வின் பொருளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தாழ்வைத் தரும் போட்டி மனப்பான்மையையும் விடுத்ததால், துன்பமில்லாமல் உயர்வோடு வாழ்கிறான், வழி தெரிந்த ஆசான் என்று விவரிக்கிறார்.