சனி, ஜூன் 10, 2006

'வழி' – 9

9. விலகும் நேரம்

விளிம்பு தாண்டிய தண்ணீர்
தளும்பி வழிந்தே வீணாகும்.

எல்லை தாண்டிய கூர்மைதானே
வேலின் கூர்உடையக் காரணம்.

தன்னைக் காக்கத் தேடிச்சேர்த்த
பொன்னும் மணியும் ஓடாதிருக்க

தேடிய பொன்னைக் காக்கவேண்டி
வாடித்திரியும் நிலைதான் வருமே!

முழுமையோடு பணியை முடித்து
வழுவில்லாமல் விலகி நின்றால்

எல்லை தாண்டும் அபாயமுமில்லை;
தொல்லையின்றி சொர்க்கமும் வருமே!

******

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றிற்கு விளக்கம் போல் அமைந்திருக்கிறது இந்த அத்தியாயம். கடமையை முடித்தபின் விலக வேண்டும் என்ற கருத்து மிக ஆழமானது, நடைமுறையில் மிக மிக அத்தியாவசியமானது.

வாழ்க்கையில் இதை பலமுறை பார்த்திருக்கிறேன். திறமையோ, திறனோ மங்க ஆரம்பித்துவிட்டாலும், தொடர்ந்து நடிக்கவோ, விளையாடவோ விரும்பும் நடிக/நடிகையர்கள், விளையாட்டு வீரர்கள் எத்தனையோ பேர். அதே போல் செல்வாக்கு இழந்து வருவதைப் புரிந்து கொள்ளாமல் ஆண்டுகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவரும் அனேகம்.

இந்து தத்துவத்தில் விளக்கப்பட்ட ஐந்து நிலைகள்: பால்யம், பிரும்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் - இந்த மாதிரி கடைமைகளை முடித்து அடுத்த நிலைக்கு செல்வதை வலியுறுத்துகிறது.