புதன், பிப்ரவரி 02, 2011

'வழி' - 53

'வழி' - 53
தேர்ந்தெடுத்த பாதை

'வழி'யும் காட்டிடுமே நிறைவான பாதையதை
பழித்தே ஒதுக்கிடுவார் முறைமறந்த மனிதருமே

பொறுமையாய் 'வழி'யதனின் முழுமையை உணராமல்
குறுக்கு வழியதனை விரும்பியே செல்வாரே

நிலத்திலே பயிரதனின் கதிராடாக் காலத்தில்
நிலமாளும் மன்னவரின் கோட்டையிலே கொடியாட

உழைத்த செல்வத்தை செலவழிக்கும் நாட்டினிலே
பிழைக்க ‘வழி’யுமே இல்லாமல் போகுமே


*********

வாழ்க்கைத் தத்துவங்களை விளக்குகையில், ஒரு அரசன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் என்பதைப் பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். 'வழி' தத்துவங்களில் முழுமை பெறுவது என்கிற தத்துவம் முக்கியமான ஒன்று. நாட்டில் முழுமை அரசனின் கோட்டையில் மட்டுமல்ல அவ்வரசில் இருக்கும் குடிமக்களின் தரத்தில்தான் முக்கியமாக இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறார். குடிமக்களின் பசி நீக்காமல் தன் நலம் பேணும் அரசன், 'வழி' காட்டும் முழுமையை அடையாமல் குறுக்கு வழியில் போவதற்கு ஒப்பாகும் என்கிறார் இந்த அத்தியாயத்தில்.

இந்த அத்தியாயத்தைப் படிக்கையில் பழந்தமிழ்ப் பாடலொன்று நினைப்புக்கு வருகிறது:
வரப்புயர நீருயரும்
நீருயரக் கதிருயரும்
கதிருயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்.