ஞாயிறு, மார்ச் 25, 2007

'வழி' - 50

50. வாழுகின்ற வழி

மொத்தமாய் இவ்வுலகிலே பிறக்கின்ற மக்களிலே
பத்திலே மூவரிங்கே உடலாலே வாழ்வாரே

கத்தியாலே இவ்வுலகை வசப்படுத்தும் எண்ணத்தால்
பத்திலே மூவரிங்கே இறப்புடனே இருப்பாரே

நித்தமுமே பொருள்தேடி காலத்தைக் கழித்ததனால்
பத்திலே மூவரிங்கே வாழ்வதனின் பொருளிழப்பார்

சித்தத்தில் வழியதனைப் பற்றிவிட்ட காரணத்தால்
பத்திலே ஒருவர்மட்டும் முழுமையோடு வாழ்வாரே

வலிவுடனே வழிபுரிந்து வாழுகின்ற காரணத்தால்
புலியும் போருமிவன் மரணத்தைத் தாராதே

பிறப்பவற்றின் தன்மைகளைத் தெரிந்த ஆசானும்
இறப்பிருக்கும் இடத்திலே இருப்பதும் இல்லையே


*********

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் உலகின் மக்களை நான்கு விதமாகப் பிரிக்கிறார்.
உடலால் மட்டும் வாழ்பவர்: தேக சுகங்களை மட்டுமே எண்ணியிருப்பவர்.
வன்முறையைத் தழுவி வாழ்பவர்: வசப்படுத்தும் எண்ணத்துடன் இருப்பவர்.
தனமே முதல் என்றிருப்பவர்: சேர்த்த பொருளின் அளவே வாழ்க்கையின் வளத்தைக் காட்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்.

இந்த மூன்று வகைகளும் முழுமை தரத் தக்கதல்ல. 'வழி'யைப் பற்றி இப்பிரபஞ்சத்தின் பொருட்களின் தன்மையறிந்த ஆசானுக்கு அழிவென்பதும் இல்லை.