சனி, ஜனவரி 20, 2007

'வழி' – 41

41. மூவகை மக்கள்

வழியறிந்த ஆசானும் வழியுணர்த்த வருகையிலே
வழியறியா மக்களுமே இருப்பாரே மூவகையாய்

விடாத உடும்பாக வழியதனைப் பற்றியதால்
கெடாத உறுதியுடன் வாழ்பவர்கள் முதல்வகையில்

எட்டிஎட்டிப் பார்த்துவிட்டு வற்றாத வழியதனை
எட்டாமலே இருப்பவர்கள் இரண்டாம் வகைதனிலே

எள்ளி நகையாடி அறியாமையில் வழியதனை
தள்ளி ஒதுக்கியே செல்பவர்கள் மூன்றாம்வகை

அறிவுதாண்டிய ‘வழி’யின் போதனைகள் கேட்டதிலே
அறியாமை இயல்பாக நகைப்பதும் வியப்பில்லையே

எதிர்மறைப் பொருட்களின் தொடர்பறியா மக்களுக்கு
புதிராகத் தோன்றுமே 'வழி'யின் போதனைகள்

எளிதான வழியுமே கடினமாய் தோன்றுமே
வெளிச்சமும் இங்கே இருளாய் மறையுமே

ஓசையிலே இசைதேடி மகிழ்வடையும் அறிவுக்கு
இசையே மௌனமென்னும் வழியின்மொழி நகைப்பாகும்

வடிவத்தால் பொருளதனின் வகையறியும் அறிவுக்கு
வடிவமில்லா சக்தியதன் பொருளுணர ‘வழி’வேண்டும்

அறிவாலே தேடுகையில் வழியுமிங்கே ஒளிந்திருக்கும்
செறிவான ‘வழி’யொன்றே அனைத்தையுமே முழுமையாக்கும்


*********

ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் உலக மக்களை மூன்று வகைகளாக - புரிந்து வாழ்பவர், புரிந்தும் புரியாமல் இருப்பவர், புரியாமலே நடப்பவர் என்று பிரித்துக் காட்டியிருக்கிறார். உலகில் நமக்குப் புரியாதவை அனைத்துமே நம் அறிவின் எல்லைக்கு அப்பால்தான் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் நம் அறிவு விரிவடைகிறது. நம் அறிவுக்கு எட்டவில்லை என்ற ஒரே காரணத்தால் புரியாதவைகளை நகைத்து ஒதுக்க முடியாது. நமக்குப் புரியாதவைகள் இருப்பதே நம் அறிவின் குறைவுக்கு சாட்சி. புரிந்து கொண்டவர் 'வழி'யை ஒத்து வாழ்வார்.