சனி, டிசம்பர் 02, 2006

‘வழி’ -34

34. வழியின் தன்மை

பொங்கிவரும் வெள்ளம்போல் பரப்பிரும்ம வழியுமே
தங்குதடை இன்றியே பரந்தெங்கும் பாயுமே

நீரும் நிலமும் வானும் வையமும்
இரந்தே பெற்றாலும் மறுப்பது இல்லையே

உயிரையும் உடலையும் உருவாக்கியே தந்தாலும்
உரிமையோடு சொந்தமே கொண்டாடுவது இல்லையே

உருவமும் வடிவும் தெரியாத காரணத்தால்
சிறிது இதென்று பலரும் சொல்லலாமே

உருவாக்கித் தந்தாலும் தனதாக்கா தன்மையதை
அறமறிந்த வழியதனனின் உயர்வையே உணர்வாயோ?


*********

இந்த அத்தியாயத்தில் 'எல்லாவற்றையும் படைத்த சக்திக்கு, அதன் படைப்பில் வந்தவற்றின் புகழ்ச்சியோ, அங்கீகாரமோ தேவையில்லை' என்பதை மிக அழகாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

'பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமே' என்று கொண்டாடிப் பாடியிருக்கிறார்கள் தமிழில். 'வழி' (அல்லது இறைவன், இயற்கை) இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது; இருப்பினும், இதன் படைப்பினால் வந்த பஞ்ச பூதங்களையும், உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளையும் தன்னுடையது என்று விளம்பரப்படுத்த இது முயல்வதில்லை.

சிறு விஷ்யங்களைக்கூட 'என்னால் செய்யப்பட்டது' என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் நம் போன்ற மக்களுக்கு, அனைத்தையுமே உருவாக்கித் தந்த இந்த மகா சக்தியின் அடக்கம் ஒரு நல்ல பாடம்தான்.