'வழி' - 30
30. வன்முறை வழியல்லதன்மையான 'வழி'யினையே தழுவியாளும் அரசருமே
வன்முறையே வழியாக ஒருநாளும் வாழாரே
விடையளித்த வன்முறையே திரும்பியே தாக்கிடுமே
படைநடந்த நிலங்களில் பயிர்களும் வளராதே
வெற்றியின் கொண்டாட்டம் மொத்தமாய் மறையுமுன்னே
பற்றிடுமே பஞ்சமும் பட்டினியும் நாட்டினையே
போரின் கொடுமை உணர்ந்த தளபதியும்
புரிந்தே நிறுத்திடுவான் இலக்கை அடைந்தவுடன்
வெற்றியை அடைந்து இழப்பின்றி வந்தாலும்
இறப்பிலே மகிழ்ச்சியை மனமும் காணாதே
வழியின் உயர்வை உணர்ந்த தளபதியும்
அழிக்கும் கடமையையும் இவ்வாறே செய்கின்றான்
செய்வதில் மகிழ்ச்சியை ஒருபோதும் அடையாமல்
செய்வதில் பெருமையை கணமேனும் நினையாமல்
புகழ்ச்சியை வன்முறையால் பெறவே நினையாமல்
அழிப்பதை வருத்தமான கடமையாய் முடிப்பானே
தளர்ந்திடுமே மலைகளுமே இயற்கையின் வழியினிலே
இளமையிலே இறந்திடுவார் வழிதழுவா அரசருமே
**********
இந்த 'வழி' தொகுப்பில், ஒரு தனி மனிதனுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வதைப் பற்றி மட்டும் எழுதாமல், ஒரு அரசன் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும், ஆட்சி புரிய வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இந்த அத்தியாயத்தில், போரினால் மட்டுமே அல்லது வன்முறையால் மட்டுமே ஆட்சி நடத்த நினைக்கும் அரசர்களுக்கு , போர் வன்முறையால் ஏற்படும் தீமை பற்றி விளக்குகிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கும் முன்பு எழுதியிருந்தாலும், இப்போது உலகில் இருக்கும் பல அரசுகளுக்கு இது பொருந்தும்.
2 Comments:
உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு
----குறள்
குறளைக் குறிப்பிட்டதற்கு நன்றி அனானிமஸ்.
ரங்கா.
கருத்துரையிடுக
<< Home