சனி, செப்டம்பர் 09, 2006

'வழி' - 22

22. விட்டுக் கொடு

விட்டுக்கொடு; அதனால் வெற்றி கொள்ளலாம்.
வளைந்துகொடு; அதனால் நிமிர்ந்து நிற்கலாம்.

வெறுமையோடிரு; அதனால் நிறைவு அடையலாம்.
களைத்துப்போ; அதனால் புத்துணர்வு அடையலாம்.

குறைவாக வைத்துக்கொள்; பெறுவது அதிகம்
அதிகம் வைத்திருந்தால் குழப்பமே மிஞ்சும்

கற்றவர் இதனால் அவனைத் தேடுகிறார்
மற்றவருக்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறார்.

பட்டுத் தெரிந்த முன்னோர் சொன்னது:
"விட்டுக்கொடு; அதனால் வெற்றி கொள்ளலாம்."

முழுமை அடைந்திட மனதை வெற்றிடமாக்கிவிடு
முழுமை அடைந்திட்டால் உலகமே உனதாகுமே.



********


இந்த அத்தியாயத்தில் வாழ்க்கை சுழற்சியென்பதையும், அதனால் போட்டி மனப்பான்மையின்றி விட்டுக் கொடுக்கும் தன்மையே நிரந்தர வெற்றிக்கு ஏதுவாகும் என்றும் விளக்குகிறார். தமிழில் இல்லற இலக்கணங்களை எடுத்துரைக்கும் போது கூறப்படும் ஒரு சொல்: "ஊடலில் தோற்றவரே வென்றவராவார்". ஆசான் உலகம் அனைத்தையும் பரப்பிரும்ம சக்தியின் வடிவாகப் பார்க்கும் போது, ஒருவொருக்கொருவர் போட்டியும், பொறாமையும் பாராட்டுவது அவருக்கு வியப்பாகவும், நகைப்பாகவும் இருக்கிறது.

பைபிளிலும் இது போன்று ஒரு வாசகம் வருகிறது என்று நண்பர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்: "அடுத்தவரை நேசி" [Love thy neighbor]. இதில் அடுத்தவர் என்று குறிப்பிடப்படுபவர் உலகத்தில் உள்ள அனைவரையும் குறிக்கும். உலகம் முழுவதிலும் உள்ளவரை நேசி என்பதே அதன் பொருள். ஒருவரை நேசித்துவிட்டால், அவரோடு போட்டி போடத் தோன்றாது, பொறாமையும் வராது. பொறாமை இல்லையென்றால் சண்டையோ, தோல்வியோ இல்லை. அதனாலேயே இந்த வாக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது: "விட்டுக் கொடு; அதனால் வெற்றி கொள்ளலாம்".

விட்டுக் கொடுப்பதை தோல்வியாகக் கருதுவோருக்கு, விட்டுக் கொடுப்பதால் வெற்றி என்று சொல்வது எதிர்மறையாகத் தோன்றலாம். இது போன்று எதிர்மறை எடுத்துக் காட்டுகளை திருக்குறளிலும் காணலாம். உதாரணமாக:
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். – [அறத்துப்பால் - வெகுளாமை 301]