சனி, ஆகஸ்ட் 19, 2006

‘வழி’ -19

19. எளிமை

அறிவைத் தராத பட்டங்களையும்
செறிவைத் தராத ஞானத்தையும்

அறவே ஒதுக்கி விலக்கினால்
பெறுவாரே நலமும் மக்களுமே

மதியோடு அன்பை உணர்ந்தோருக்கு
நீதியை கற்கத் தேவையில்லையே

ஏய்ப்பும் பேராசையும் குறைந்தாலே
பொய்யும் திருட்டும் மறைந்திடுமே

இவைகளை உள்ளத்தில் நிறுத்தினாலே
சுவையாய் வாழ்க்கை அமைந்திடுமே

வாழ்க்கை இனிதாய் அமைந்தாலும்
முழுமை பெற்றிட முடியாது

முழுமை இங்கு அடைந்திடவே
வழியை தழுவியே வாழ்ந்திடணும்

உள்ளத்தில் வழியும் தெரிவதற்கே
எளிமையை வாழ்விலே பெற்றிடணும்

தன்னலம் அறவே ஒதுக்கியே
மனதில் பற்றை நீக்கினாலே

இயற்கையின் தன்மை வந்திடுமே
உயர்வாய் எளிமை அடைந்திடலாம்


*******

படித்தால் மட்டும் போதுமா? என்ற கேள்விக்கு விடை தருவது போல ஆரம்பிக்கும் இந்த அத்தியாயத்தில், எளிமையின் வலிமையை விளக்குகிறார். 'ஒரு மனிதன் முழுமையடைய தேவையானவைகளில் அறிவும் ஒன்று. அந்த அறிவைப் பெற கல்விச் சாலைகள் உதவலாம் - கல்விச் சாலைகள் தரும் பட்டங்களில் தான் அந்த அறிவு இருக்கின்றது என்று நினைப்பது தவறு; இயல்பாக வர வேண்டிய குணங்களை, இயற்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என்று பொருள் வருமாறு எழுதியிருக்கிறார். எளிமையான வாழ்வை வகுத்துக் கொள்ள பற்றுதலை அகற்றி தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வாழ்விலே எளிமை வந்து விட்டால் முழுமை அடைவது சுலபம் என்று இங்கு விளக்குகிறார்.