சனி, ஆகஸ்ட் 05, 2006

‘வழி’ - 17

17. ஆள்பவர் நான்குவகை

சத்தமில்லா நிறைகுடமாய் ஆள்வதையே உணராமல்
உத்தமமாய் பொறுப்போடு ஆள்பவர் முதல்வகை.

மகிழ்ச்சியோடு பலகாலம், ஆளப்பட்ட மக்களாலே
புகழ்ச்சியோடு பாடப்பட்டு மறைந்தவர் இரண்டாம்வகை.

கயமையோடு மக்களின் நிம்மதியைக் குலைத்தே
பயத்தோடு வாழச்செய்த கொடுங்கோலர் மூன்றாம்வகை

பொறுப்பில்லா செயலாலே அநீதியோடு மக்களை
வெறுத்தோடி வாழச்செய்த இராக்கதர்கள் நான்காம்வகை

மக்களிடம் நம்பிக்கை இல்லாத மன்னரிடம்
மக்களுக்கு நம்பிக்கை இருப்பது இல்லையே!

உத்தமர்கள் ஆட்சியிலே அடைகின்ற பலனெல்லாம்
மொத்தமாய் சென்றடையும் குறைவின்றி குடிகளுக்கே.


*******

தனி மனித வாழ்வின் முக்திக்காக மட்டும் லாவொட்ஸே எழுதவில்லை. இந்த அத்தியாத்தில் ஒரு தலைவன் (அல்லது தலைவி) தன் குடிமக்களை, நாட்டை நடத்தும் முறைகளை வகைப்படுத்துகிறார். நம்பிக்கை என்பது இரு வழிப்பாதை என்பதையும் உணர்த்துகிறார்.

திருவள்ளுவர் திருக்குறளில் மன்னராட்சி முறை பற்றி நன்கு விளக்கியுள்ளார் 'இறை மாட்சி' அதிகாரத்தில். குறள்களை வரிசையாகத் தருவதற்கு பதிலாக, எளிமையான, தரமான விளக்கங்களுடன் எழுதப்பட்ட நித்திலின் 'எண்ணப் பின்னல்கள்' பதிவின் சுட்டியைத் தருகிறேன்.

இப்போது உலகத்து நாடுகளில் நடக்கும் ஆட்சிமுறையை இந்த நான்கு வகைகளில் எந்தெந்த வகையோடு சேர்க்கலாம் என்பதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.