சனி, ஜூலை 15, 2006

‘வழி’ - 14

14. புதிர்

பார்த்தாலும் தெரியாத உருவமது
பார்வையையும் தாண்டிய அரூபமது

செவிக்குக் கேட்காத ஒலியதுவே
செவிப்புலனைத் தாண்டிய ஓசையது

புலன்கள் தொட்டாலும் புரியாது
புலன்களைத் தாண்டிய புதிரதுவே

விளக்க முடியாத விளக்கமதே
விளக்கங்கள் தாண்டிய விடையதுவே

நிறைந்து உதித்ததால் வெளிச்சமில்லை
மறைந்து ஒளிந்தாலும் இருட்டுமில்லை

உதித்தலும் மறைதலும் தெரிந்தபோதும்
மதிக்கு விளங்காத நிகழ்வதுவே

பின்தொடர முடிவில்லா வழியதுவே
கண்பார்க்க முகமில்லா வடிவதுவே

இன்நாளின் கடமைகளை முடிப்பதாலே
முன்வினைக் கடன்களைத் தீர்ப்பாயே

செவ்வழி சுழற்சியின் தத்துவத்தை
இவ்விதமாய் நீயும்தான் அறிவாயே!


***********

அறிந்து கொள்வது, அல்லது புரிந்து கொள்வது என்பது நம் புலன்களாலும், அறிவாலும் வருவது. இந்தப் புலன்களுக்கு ஒரு எல்லை உண்டு; அந்த எல்லையைத் தாண்டி இருப்பது உணர்வதற்கு வேறு சாதனங்களைத் தான் உபயோகிக்க வேண்டும் (உதாரணம்: கண்ணால் பார்க்க முடியாத ஒளியலைக்கு, ரேடியோ டெலஸ்கோப் உபயோகிப்பது போல). புரிந்து கொள்வதற்கு அறிவு நிச்சயம் வேண்டும். அதற்கும் எல்லை வந்து விடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது: "இதுவரை தெரிந்து கொண்டதால் வந்த அறிவு எழுப்பும் கேள்விகளுக்கு, இதுவரை பெற்ற அறிவு பதில் சொல்லாது". [We cannot solve our problems with the same thinking we used when we created them.]


பரப்பிரும்ம சக்தி பற்றி நான்காவது அத்தியாயத்தில் விவரித்திருக்கிறார். இங்கு அந்த சக்தியின் வீர்யத்தை விவரிப்பதோடு, இன்று ஏன் நம் கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார். கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது:
"நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று" (படம்: அபூர்வ ராகங்கள்).

தம் கடமைகளை செய்வதன் மூலம் ஒருவர் பரப்பிரும்ம வழியைப் புரிந்து கொள்ள முடியும்; கடமைகளை மறந்து பரப்பிரும்ம வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் முயன்றால் முடியாது என்று கருத்து வருகிறது. பஜகோவிந்தத்தில் இது போன்ற கருத்தை ஆதிசங்கரர் விளக்குகிறார் - கோவிந்தனை அடைவது பற்றி.