சனி, ஜூலை 01, 2006

‘வழி’ - 12

12. புலன்களும் அகமும்

கண்ணுக்கு குளிர்வு வானவில்லின் வண்ணங்கள்
கண்ணே குருடாகும் வீரியமான ஒளியாலே

காதுக்கு இனிமை முறையான ஒலியாலே
காதை செவிடாக்கும் வரைகடந்த பேரோசை

ருசித்திருக்கும் வாயும் வளமோடு அறுசுவையை
கசந்திடுமே நாவும் அளவுகடந்து போனாலே

விரட்டி வேட்டையாடி பெற்ற உணவும்
நிரப்பாமல் போகும் உந்தன் மதிதனை

திரட்டிச் சேர்த்த விலையற்ற சொத்தும்
வரண்டேபோகும் உன்னைக் காக்க மறுத்தே

புலன்களின் தேவை புரிந்த அறிஞன்
பலமோடு வாழ அகத்தைப் பேணுகிறான்

மூலத்தின் ரகசியம் தெரிந்து கொண்டதனால்
நலமோடு வாழ புலன்களை அடக்குகிறான்.


*********

இரண்டு கருத்துகள் இந்த அத்தியாத்தில். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு' என்ற பழமொழிக்கு விளக்கம் போல் புலன்களுக்கு இதம் தரும் பொருட்களே அளவு கடந்தால் புலன்களை கெடுத்துவிடும் என்பதை விளக்கியதோடு மட்டுமல்லாமல், அந்தப் புலன்களை அடக்கியாளும் மனத்தை அடக்குவது முக்கியம் என்பதையும் அழகாக உரைக்கிறார்.

புலன்களின் பசி தீர அவைகளுக்கு தீனி போட்டு மட்டும் முடியாது. அவற்றின் பசியை அறவே அகற்ற அகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அகம் புலன்களின் தேவைகளின் மூலம்; புலன்களைத் தூண்டுவதும், கட்டுப்படுத்துவதும் அகத்திடம் உள்ளது.

விநாயகருக்கு வாகனமாக சுண்டெலி இருப்பதற்கும் இது போன்ற ஒரு தத்துவம் உண்டு. உடலுக்கு யானையைப் போல பலம் இருந்தாலும், அளவில் சுண்டெலியை ஒத்த மனத்தைக் கட்டுப் படுத்தாவிட்டால், யானைக்கும் திண்டாட்டம் தான், என்பதைக் குறிக்கவே யானை உருவமான விநாயகர் சுண்டெலியை கட்டுப்படுத்தி வாகனமாகக் கொண்டார் என்று கூறுவார்கள்.

மனதின் முக்கியத்துவம், திருவள்ளுவரின் இந்தக் குறளிலில் இருந்து தெரிகிறது:
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீற பிற." (34)