சனி, ஜூலை 08, 2006

‘வழி’ - 13

13. புகழ்ச்சியும் இகழ்ச்சியும்

புகழ்ச்சியைத் தேடியே கழித்திடும் பொழுதெல்லாம்
இகழ்ச்சியை நாடியே போவதற்கு ஒப்பாகும்

வந்தடையும் இகழ்ச்சியால் மனத்தில் கவலை
வந்தது வரக் கூடாதென்னும் நினைப்பினால்

வந்தடையும் புகழ்ச்சியாலும் மனத்தில் கவலை
வந்தது விலகக் கூடாதென்னும் பயத்தினால்

மனத்திருந்து போகாது கவலையும் பயமும்
மனத்திலே ‘நான்’என்னும் நினைப்புள்ள வரையிலும்

வெற்றியும் தோல்வியும் தாக்காது இருக்குமே
பற்றற்று திட்டமாய் நிற்கும் மனத்திலே

உலகின் மதிப்பை தன்னிடம் பார்ப்பவருக்கு
உலகை நடத்தும் பொறுப்பினைத் தரலாம்

உலகைத் தன்னுயிராய் அன்புடன் பார்த்தாலே
உலகையே நலமாகப் பேணத் தரலாமே.


****************

இன்பம் என்று ஒன்றிருந்தால் துன்பம் என்பதும் உண்டு என்பதை விளக்குகிறார். வெற்றியைத் தேடுபவன் தோல்விக்கு பயப்படக் கூடாது என்று சொல்லுவார்கள். புகழும், இகழ்ச்சியும் - இரண்டுமே கவலைக்குக் காரணம்; ஆகையால் புகழ்ச்சியைத் தேடிச் செல்வது விரயம் என்று உணர்த்துகிறார்.

இன்னுமொரு கருத்தையும் இங்கு அழகாக விளக்குகிறார். மதிப்போடு பார்ப்பது - அன்போடு நேசிப்பது, இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். உலகத்தை மதிப்போடு பார்ப்பவருக்கு நிர்வாகப் பொறுப்பைத் தரலாம் என்றும், அன்போடு உயிரைப் போல நேசிப்பவருக்கு உலகையே தரலாம் என்று சொல்கிறார்.

சிறு வயதில் இந்தக் கருத்தை விளக்கும் ஒரு கதையைக் கேட்டிருக்கிறேன். வயதான செல்வந்தரான தந்தைக்கு இரண்டு மகன்கள். யாருக்கு நிலத்தையும், யாருக்கு வர்த்தகத் தொழில் சம்பந்தமான சொத்துக்களையும் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க, தான தருமங்களில் ஈடுபாடு கொண்ட மூத்தவனுக்கு விவசாயம் சம்பந்தமான நிலம் மற்றும் இதர சொத்துக்களையும், பொருள்களின் மதிப்பு தெரிந்து நடக்கும் இரண்டாம் மகனுக்கு, வியாபார சொத்துக்களையும் தருவதாக முடிவெடுத்ததாகக் கதையில் வரும். கிட்டத்தட்ட அதே கருத்துதான் இங்கே.