சனி, ஜூலை 22, 2006

‘வழி’ - 15

15. வழியறிந்த ஆசான்

வழியறிந்த ஆசானிடம் தெரிபவை எல்லாம்
பழியற்ற புனிதமும், ஆழமான அறிவும்.

உள்ளறிவின் ஆழத்தைப் எடுத்துரைக்க முடியாமல்
வெளியழகின் தன்மையை வர்ணிக்க வருகிறதே

வழுக்கும் தரையில் நடக்கின்ற கவனம்
சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்த விழிப்பு

முறையான விருந்தினரின் இதமான கௌரவம்
குறையில்லா பனியின் இளகும் மென்மை

செதுக்காத மரத்தின் திடமான கம்பீரம்
ஒதுக்காமல் ஏற்கும் மனதின் தாராளம்

ஆசையின்றி மனது வெற்றிடம் ஆனதாலே
காசையோ பொருளையோ அவன் தேடுவதில்லையே

குழம்பிய தண்ணீரும் சலனமற்று நின்றாலே
குழந்தையின் உள்ளம்போல் தெளிவாகித் தோன்றுமே

சலனமற்ற மனத்தால் உலகத்தை பார்ப்பதாலே
நலமாக ஆசானும் தெளிவைத் தருவானே!


**********

இந்த அத்தியாயத்தில் பரப்பிரும்ம வழி தெரிந்த ஒருவரின் தன்மையை விவரிக்கிறார். உள்ளே இருக்கும் மனத்தின் அழகை, ஆழத்தை வர்ணிப்பது கடினம். புற அழகை, தன்மையை விளக்குவது எளிது. இங்கு விழிப்பு கலந்த கவனத்தையும், மென்மை பொருந்திய கௌரவத்தையும், கம்பீரத்தையும், தாராள மனப்பான்மையும் விவரிக்கிறார்.

ஆசைகளில்லாத வெற்றிடமாய் இருக்கும் மனதின் மேன்மையையும் சுட்டிக் காட்டுகிறார். மனதில் தோன்றும் சலனங்களே குழப்பத்திற்கு காரணம் என்பதையும், எப்படி குழம்பிய தண்ணீரும் சலனமில்லாமல் இருந்தால் தெளிவாத் தெரிகிறது என்பதோடு ஒப்பிட்டு, சலனமில்லாமல் பார்ப்பதாலேயே ஆசான் தெளிவைத் தருகிறான் என்றும் விளக்குகிறார்.