சனி, செப்டம்பர் 16, 2006

‘வழி' – 23

23. இயற்கையின் மௌனம்

அடை மழையும் ஊழிக் காற்றும்
இடை விடாது இருப்பது இல்லையே

இயற்கையின் இப்பேச்சின் இடைவெளி தானே
இயல்பான வாழ்விற்கு காரணம் ஆனது.

நலம்தரும் இயற்கையின் மௌனம் தெரிந்தும்
ஓலமிட்டு மனிதர்கள் பேசுவதும் ஏனோ?

வழியோடு வாழ்ந்தாலே பழியேதும் வாராதே
'வழி'யோடு ஒன்றாகி வழிகாட்டி ஆகிடலாம்.


*********

'நிறை குடம் தளும்பாது' என்னும் பழமொழியை நினைவு படுத்தும் அத்தியாயம். எல்லாம் வல்ல இயற்கையே மௌனத்தை கடைபிடிக்கும் போது, இயற்கையின் விளைவுகளின் ஒன்றான மனிதன் மட்டும் நிரம்பப் பேசுவது ஏனோ? இயற்கையை ஒன்றி வாழ்வது - 'வழி'யை ஒத்து வாழ்வதைப் போன்றது. இயற்கையின் மௌனத்தில் வளம் பெருகுவது போல, மனிதனின் மௌனத்திலும் வளம் பெருகும் என்று அழகாக விளக்கியிருக்கிறார்.