சனி, அக்டோபர் 07, 2006

'வழி' - 26

26. சலனம் இல்லாமை

கனமில்லா பொருட்கள் மேலே வருமே
கனமான பொருட்கள் கீழே இருக்க
கனம் வேராகும் கனமில்லா பொருட்களுக்கு

அசைந்தாடி நிற்கும் கிளை இலைகளையே
அசையாமல் காத்துநிற்கும் மரத்தின் வேர்தானே
அசைவு அற்றவையே அசைவின் மூலமாகும்

சுமையான வாழ்க்கைப் பயணத்தை இலேசாக்க
சுமைதரும் சலனங்களை அறவே ஒதுக்கிவிட்டு
அமைதியோடு அசையாமல் மனதை நிறுத்துகிறான்

இலேசாய் பறப்பதற்கு பற்றுதலை விட்டிடணும்
கிலேசங்கள் இருப்பதாலே தன்னிலை குலைந்திடுமே
மேலே செல்வதற்கு ஆசானின் வழியிதுவே!


**********


சீன தத்துவங்களில் எதிர்மறைப் பொருள்களின் தொடர்பு அதிகமாக எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த அத்தியாயத்தில் மனதில் சலனம் இல்லாமல், பற்று இல்லாமல் இருக்க வேண்டிய காரணத்தையும் எதிர்மறைப் பொருள்களின் தொடர்பாலேயே எடுத்துக் காட்டுகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் எப்படி பற்றற்று இருக்க வேண்டும் என்று சொன்னதைப் போல இங்கு ஏன் சலனம் இல்லாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.