சனி, அக்டோபர் 21, 2006

'வழி' – 28

28. முரண்பாடுகளின் தொடர்பு

ஆண்உடலின் வலிமையை நிரம்பவே பெற்றாலும்
பெண்மனதின் மென்மையை பெற்றிடவே மறக்காதே

மென்மையும் வலிமையும் ஒருங்கே பெற்றதனால்
தன்மையான இயற்கையின் பக்குவம் அடைந்திடுவாய்

கழலின் ஒளிதரும் நன்மை அறிந்தாலும்
நிழலின் இருள்தரும் அருமை மறக்காதே

ஒளியின் இருளின் தொடர்பு புரிந்ததனால்
தெளிவாய் பார்க்கும் வன்மை அடைந்திடுவாய்

மகிழ்வாய் புகழின் உச்சியையே அடைந்தாலும்
நெகிழ்வாய் பணிவின் ஆழமடைய மறக்காதே

மலையையும் கடலையும் உணர்ந்தே பார்த்ததனால்
நிலையைக் குலைக்காத நிதானம் பெற்றிடுவாய்

முரணான குணங்களில் தொடர்பறிந்த ஆசானும்
அரணான இயற்கையைக் குலைப்பது இல்லையே

குலையாத இயற்கையின் அழகான வலிவையே
அலையாத மனத்தினால் வாழ்க்கையில் அடைந்திடுவாய்

*********

இயற்கையில் மலையும் உண்டு, மடுவும் உண்டு. கடலும் உண்டு, பாலைவனமும் உண்டு. இப்புவியின் தொடர்ச்சிக்கு, முரண்பாடான குணங்கள் உடைய அனைத்தும் துணை புரிகின்றன. இவ்வுலகம் முழுதும், கடல் மட்டும் இருந்தாலோ, அல்லது வயல் மட்டுமே இருந்தாலோ வளமாக இத்தனை உயிர்கள் இருக்க முடியாது. அதே போல மனிதனுக்கும் குணங்களின் எதிரெதிர் துருவங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

இந்த அத்தியாயத்தில் மனிதன் எப்படி எதிரெதிர் குணங்களைப் பற்றி அறிந்து, இயற்கையின் இந்த சமச்சீரான வலிமையைப் புரிந்து வாழ வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். மலையின் உயரத்தைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, கடலின் ஆழத்தையும் அறிந்து கொண்டால் முழுமை பெற்றிடலாம் என்று அழகாகக் காட்டுகிறார்.