சனி, டிசம்பர் 09, 2006

'வழி' - 35

35. வழி தரும் முழுமை

உடலுக்கு அணைவாகும் நல்லுணவும் இன்னிசையும்
தேடலுக்கு துணையாவான் 'வழி'காட்டும் ஆசானவன்

நிரந்தர இன்பத்தை தருகின்ற காரணத்தால்
வரந்தர வேண்டியே வந்தடைவார் ஆசானை

சுவையற்றதாய்த் தோன்றும் 'வழி'யின் போதனைகள்
அவையனத்தும் அளிக்குமே வாழ்வில் முழுமையையே

சுற்றும் பார்க்கினும் தெரிபவை அரூபம்தானே
உற்றுக் கேட்கையில் சப்தங்கள் மௌனம்தானே

தொடர்ந்து எடுத்தாலும் இருப்பவை குறையாதே
தொடர்பு புரிந்தாலே விழிப்பும் வந்திடுமே.

*********

இந்த அத்தியாயத்தில், "வாழ்க்கையில் முழுமை அடைய நிலையான உண்மை எது, உயிர்களின், பொருட்களின் தொடர்பு என்ன என்பது புரிய வேண்டும். இந்தப் புரிதலுக்கு குருவின், ஆசிரியரின் துணை வேண்டும்" என்பதை விளக்குகிறார் ஆசிரியர். இந்து தத்துவங்களிலும் ஆசிரியரின் பெருமை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது - மாதா, பிதா, குரு, தெய்வம் - என்று தெய்வத்திற்கு முன் குருவை வைத்துள்ளார்கள்.

அதே போல மாயை, சக்தி போன்றவற்றையும் அதன் தொடர்பையும் இந்து தத்துவங்களில் நிறையப் பேர் விளக்கியிருக்கிறார்கள். உருவத்திற்கும், அரூபத்திற்கும் உள்ள தொடர்பு, சப்தத்திற்கும் நிசப்பத்திற்கும் உள்ள தொடர்பு என்ற முரண்பாடுகளின் தொடர்பு புரிந்தாலே முழுமை பெறலாம் என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.