சனி, ஜனவரி 06, 2007

'வழி' – 39

39. அடக்கம் பெறும் முழுமை

விழிப்போடு உள்ளத்தால் உணர்ந்தே நோக்கினால்
வழியின் முழுமையுமே விரிந்தே தெரியுமே

விண்ணின் முழுமையதன் தெளிவிலே தெரியும்
மண்ணின் முழுமையதன் உறுதியிலே புரியும்

பரந்த புவியில் பிறந்த உயிராவும்
இரந்தே பெற்றிடுமே வழியின் முழுமையதை

தெளிவை இழந்திட்ட உயிரின் கண்களுக்கு
வளியும் கலங்குமே புவியும் நடுங்குமே

நாடியே இதனாலே ஆசானும் மற்றோரும்
தேடியே அடைந்திடுவார் முழுமையும் தெளிவையுமே

குறைதானே அனைத்துமே முழுமை அடையாமல்
குறையுணர்ந்த ஆசானும் வளர்ப்பானே அடக்கமதை


*********

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் முழுமையைப் பெற அடக்கம் முக்கியம் என்பதை விளக்குகிறார். இந்த பிரபஞ்சத்தில் வந்த அனைத்திற்குமே மூலமான சக்தி முழுமையானது; குறைகளற்றது. அதிலிருந்து வந்த அனைத்தும் முழுமை பெற முடியும். இந்த முழுமை பெற அறிந்து கொள்ளல் அவசியம். இந்த அறிவைப் பெற முதலில் உணர வேண்டியது, நமக்குத் தெரிந்தது குறைவு என்ற ஞானம். அதற்கு அடக்கம் முக்கியம். நாம் முழுமை பெற்று விட்டோம் என்று முடிவு செய்துவிட்டால், அதற்கு மேல் அறிவது இல்லாமல் போய்விடும். ஆதலால் நமக்குத் தெரிந்தது குறைவு என்ற எண்ணத்தை மனதில் வைத்து ஆசிரியரும் முழுமை பெறுகிறார்.

வள்ளுவரும் இதைத்தான் குறளில் (இல்லறவியல் - குறள் 121) சொன்னது:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.