'வழி' – 38
38. குழப்பங்கள் தெளிவிக்க வழிவழியுணர்ந்து முழுமையாய் ஆசானும் வாழ்வதாலே
‘வழி’யை நினைக்கவே நேரமும் இல்லையே
வழிமறந்து தடுமாறி வாழுகின்ற மக்கள்தம்
‘வழி’பற்றி பேசுவதே வேலையாய்ப் போனதே
ஒழுக்கம் புரிந்து வாழுகின்ற மக்களுக்கு
ஒழுக்கச் சான்றிதழ் தேவையே இல்லையே
அழுக்கை மனதிலே நிறுத்தியே வாழ்கையில்
ஒழுக்கத்திற்கு சாட்சிகள் தேடவே நேர்ந்ததே
அகத்திலே இரக்கம் நிரம்பியே இருக்கையில்
ஜகத்திலே உதவவே திட்டமும் வேண்டாமே
சிந்தையில் இரக்கமும் வற்றியே போனதால்
மந்தைக்குப் பேச்சே திட்டமாய்ப் போனதே
குறளில் வார்த்தைகள் குறைவாக இருந்தாலும்
அறவுரை ஆழத்தில் குறைவே இல்லையே
நீதியைத் திரித்தே உரைக்க முயல்கையில்
மீதியிருப்பவை வெற்று வார்த்தைகள் ஆனதே
ஒழுக்கமும் பிறந்திடுமே ‘வழி’யதனைப் பற்றிவிட்டால்
ஒழுக்கம் தந்திடுமே இரக்கமதை இயல்பாக
நீதியும் வந்திடுமே இரக்கம் இருந்திட்டால்
நீதியும் இருந்தாலே குழப்பமும் தவிர்த்திடலாம்
குழப்பங்கள் தருவிக்கும் அநீதித் தோல்விலக்கி
பழமான வழியதனை ஆசானும் பற்றுகிறான்
மூலத்தை பற்றியே முழுமையாய் வாழ்வதினால்
பலமான ஆசானும் குழப்பத்தை தவிர்க்கின்றான்.
*********
இந்த அத்தியாயத்தில் மனிதனுக்குத் தோன்றும் மனக் கிலேசங்கள், குழப்பங்களை தெளிவிக்க ஆசிரியர் வழி காட்டுகிறார். குழப்பங்கள் வருவது இயற்கை. ஏன், எதற்கு என்ற கேள்விகள் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். இதற்கான விடை கடினமானதல்ல, மாறாக முற்றிலும் எளிமையானது. உள்ளொழுக்கம் வந்துவிட்டால் மற்ற அனைத்தும் தாமாக வந்துவிடும்.
வள்ளுவர் சொன்னதுபோல
"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்".
இந்த ஒழுக்கத்தையும், அதன் எளிமையையும் புரிந்து கொள்ளாததால்தான் மனிதனுக்கு சுயதைரியம் தர பெரிய திட்டங்கள், சாட்சிகள், அத்தாட்சிகள் தேவையாக இருக்கிறது. மனதிலே எளிமையான ஒழுக்கம் வந்துவிட்டால், இதுபோன்ற வெளித்துணைகளின் தேவை இருக்காது. இதுபோன்ற வெளித்துணைகளை காட்டி ஏமாற்றுபவரும் இருக்க மாட்டார்கள்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home