சனி, ஜனவரி 13, 2007

'வழி' – 40

40. பிரபஞ்சம் பிறந்த வழி

சுழற்சியே வழியின் இயல்பாகும்
நெகிழ்ச்சியே வழியின் செயல்பாடு

பிறந்தது பிரபஞ்சம் வழியினாலே
பிறவாத வழியின் திறத்தினாலே


*********

மிகச் சுருக்கமான, ஆனால் மிக மிக ஆழமான ஒரு அத்தியாயம். 'புனரபி ஜனனம் புனரபி மரணம்' என்ற கீதையின் சொல்லில் அறிவுறுத்தப்படும் வாழ்க்கையின் சுழற்சியை இங்கே உணர்த்துகிறார் ஆசிரியர். இயல்பாக நிலத்தில் இயைந்து ஓடும் நதியின் ஓட்டத்தைப் போல 'வழி'யும் நெகிழ்ந்தே ஓடுகிறது.

இந்து தத்துவத்தில் 'இந்த பிரபஞ்சத்தில் வந்த பொருளனைத்திற்கும் மூலம் ஒரு ஆதாரமான சக்தியே' என்பதையும் 'இந்த சக்திக்கும் ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை' என்றும் வெவ்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். இதை சிவன் என்றோ, மகாசக்தி என்றோ, விஷ்ணு என்றோ (இன்னும் எத்தனையோ பெயர்களிலும்) வெவ்வேறு பிரிவினர் அழைத்திருக்கிறார்கள்; அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் அதை 'வழி' என்று இங்கு அழைக்கிறார்.