சனி, பிப்ரவரி 10, 2007

'வழி' – 44

44. ஆசை நிறுத்தம்

உயிரை மிஞ்சிய பொருளும் இல்லையே
உயிரையும் தாண்டி நிற்கும் புகழே

ஒழுக்கம் இல்லா புகழும் வீணே
ஒழுக்கம் இழந்தால் நீயும் இல்லையே

உன்னையும் மீறியே பொருளைநீ விரும்பினால்
பொன்னோடு உன்னயையும் இழக்கவே நேருமே

தேவையைப் புரிந்தே ஆசையை நிறுத்தினாலே
நோவையும் இழப்பையும் அடையாமலே இருக்கலாமே.



*********

இந்த அத்தியாயத்தில் மனிதனுக்கும் முக்கியமானது எது என்பதை எடுத்துரைப்பதுடன், எதனால் ஆசையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். உயிர் முக்கியம்; இறந்தாலும் இறக்காமல் இருக்க வைப்பது புகழ். இறவாப் புகழை அடைய ஒழுக்கம் அவசியம். தேவைகளைத் தாண்டி ஆசையை வளர்த்தால் ஒழுக்கத்தை இழக்க நேரிடும். ஒழுக்கம் இழந்தால் இறப்பும் வரும்; இறவாப் புகழும் தட்டிப் போகும். ஆகையால் இறவாப் புகழை அடைய ஆசையை அடக்குவது முக்கியம்.