சனி, பிப்ரவரி 03, 2007

'வழி' – 43

43. வெறுமையில் முழுமை

மென்மையான விதையேபின் மரமாகி
வன்மையான பாறையையும் பிளந்திடுமே

தனதென்ற நினைப்புமே இல்லாததாலே
தனதாக இவ்வுலகையே பார்க்கலாமே

படைத்தவனின் பெயரில்லை இருந்துமிங்கே
படைப்பினிலே குறைவில்லை பிரபஞ்சமதில்

சொல்லாலே போதனைகள் விளங்கினாலும்
சொல்தாண்டிய ஞானமன்றோ முழுமையாக்கும்


*********

இயற்கையின் சுழற்சி பற்றி தத்துவங்களிலும், மதங்களிலும் நிறைய விளக்கங்கள் உள்ளன. இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் இயற்கையின் விளம்பரமில்லா சக்தியையும், பிரபஞ்ச முழுமையில் 'தனது' என்று எடுத்துக் கொள்ளும் எதுவுமே பிரபஞ்சத்தின் பகுதிதான் என்பதையும் அழகாக விளக்குகிறார்.

முழுமையில் தான் அழகு உள்ளது; தன்னுடையது என்று தனிப்படுத்திப் பார்க்கும் எதுவுமே முழுமையிலிருந்து பிரிகிறது. இதை விடுத்து, தன்னையே முழுமையின் பகுதியாகப் பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால் முழுமையை உணரலாம். முதல் அத்தியாயத்தில் சொன்னது போல சொல்லால் விளக்கபடுவதல்ல இந்த முழுமை; உணர்ந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.