ஞாயிறு, மார்ச் 11, 2007

'வழி' – 48

48. சேர்ப்பதும் இழப்பதும்

தனமாகக் கல்வியைப் போற்றியே உழைப்போரும்
தினமுமே சேர்த்திடுவார் தனக்குள்ளே அறிவுதனை

சித்தத்தில் ‘வழி’யதனைப் பற்றியே வாழ்வோரும்
நித்தமும் இழந்திடுவார் தனதென்னும் எண்ணமதை

எத்தனைதான் சேர்த்தாலும் அறியாமை விலகாதே
மொத்தமுமாய் இழந்தாலே முழுமைதான் பெறலாமே

அறிவாலே வெல்லவே முடியாத உலகமிதை
செறிவாலே உன்னுள்ளே 'வழி'யாலே அடக்கலாமே

*********

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் நம் அறிவால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்தை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார். 'எப்படி' என்ற கேள்விக்கு அறிவால் பதில் சொல்ல முடியும். ஆனால் 'ஏன்' என்ற கேள்விக்கு அறிவு மட்டும் போதாது; ஞானமும் வேண்டும். இந்த ஞானத்தைத் தருவது 'வழி'. அறிவை வளர்க்க கல்வியின் மூலமாக அறிவைச் சேர்க்க வேண்டும். ஞானத்தை வளர்க்க 'தான்' என்னும் எண்ணத்தை இழக்க வேண்டும். முழுமை பெற அறிவு, ஞானம் இரண்டும் வேண்டும். ஆகையால் வாழ்வில் சேர்ப்பதும், இழப்பதும் - இரண்டும் வேண்டும்.