செவ்வாய், பிப்ரவரி 08, 2011

'வழி' - 55

வழி' – 55
குழந்தையும் ஞானியும்

தானென்னும் நினைப்பைத் துறந்த ஞானியும்
தானென்னும் நினைப்பே இல்லாத குழந்தையும்

'வழி'தந்த பிரபஞ்சத்தை உள்ளபடி உணர்வதாலே
வலிதரும் அபாயங்கள் அணுகுவதும் இல்லையே

வற்றியே இருந்தாலும் எலும்பும் சதையுமே
பற்றுகையில் தெரிந்திடுமே பிடிப்பின் வலிவுமே

'வழி'யின் இயல்பொற்றி இயங்கும் இயல்பாலே
இழப்புமே இல்லையே மனதிலும் உடலிலும்

நிலைப்பும் வந்திடுமே இயல்பை உணர்ந்தாலே
நிலைப்பும் உணர்த்திடுமே இயற்கையின் செயல்பாட்டை

வரையடக்க முடியாதே இயற்கையின் இயல்பையே
வரம்பை மீறுவதும் அழிவையே அளித்திடுமே


**********

இந்த அத்தியாயத்தில் வழி தத்துவத்தின் மூலக் கருத்துகளின் ஒன்றான இயல்புணர்தல் பற்றி விளக்குகிறார். பிறக்கும் பொழுது ஒரு குழந்தை இயற்கையோடு ஒன்றி இயல்பாக இருக்கிறது. வளர வளர சுயநினைவும், தான் என்கிற ஒரு உணர்வும் அது பெற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையின் பொருள் புரிந்தவர்கள், "தான் என்று ஒன்று தனித்திருப்பதில்லை, இந்த இயற்கையோடு, பிரபஞ்சத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று" என்று புரிந்தவர்கள், இந்த 'தனித்துவத்தை' இழந்து, இயல்பை உணர்கிறார்கள். இயல்பை உணர்கையிலே இயற்கையோடு ஒன்றி, இயற்கை போல பரந்து விரிகிறார்கள். இயல்பை உணராமல், இயற்கையின் வரம்பைக் கடந்து செல்ல முயற்சிக்கையிலே அழிவடைகிறார்கள்.