சனி, பிப்ரவரி 12, 2011

'வழி' – 56

'வழி' – 56
ஆசானின் தன்மை!

உரைப்பவர் உணர்ந்ததில்லை உணர்ந்தவர் உரைப்பதில்லை
உரைப்பதை நிறுத்திவிட்டு உணர்வதைத் துவக்கிடுவாய்

வாதத்தை வெல்லவே அறிவதைனைச் செலுத்தாமல்
வேதத்தை உணரவே ‘வழி’யதனைப் பற்றிடுவாய்

இயல்பை மாற்றியே சாதுர்யம் வளர்க்காமல்
இயல்பை ஒற்றியே இயங்கவும் அறிந்திடுவாய்

உயர்வான 'வழி'யதனின் இயல்பை உணர்ந்திட்டால்
துயரமும் மகிழ்ச்சியும் தாண்டியே நிற்பாயே

அகிலமும் போற்றிடும் ஆசானின் தன்மையதே
அனைத்துமே கடந்த இயல்புணர்ந்த நிலைதானே


**********

தமிழில் பலகாலமாய் இருந்து வரும் வழக்குகளில் ஒன்று 'நிறை குடம் தளும்பாது'. குறளிலும் வள்ளுவர் சொன்னது - 'சொல்லுக சொல்லிற் பயனுடைய'. சிவவாக்கியர் சொன்னது:
செய்யதெங்கிலே இளநீர் சேர்த்த காணரணங்கள் போல
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன் வாய்திறப்பதில்லையே.

வார்த்தைளைத் தாண்டி நிற்கும் பரம் பொருளை, வழியை, வார்த்தைகளால் விளக்கித் தெரிந்து கொள்ள முடியாது; உணர்ந்து தான் அறிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் நீதி பெற சட்டம் படிப்பதற்கும், சட்டத்தை மீற அதன் ஓட்டைகளைத் தெரிந்து கொள்வதற்காகப் படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் ஞானம் பெற சக்தியை, அறிவை செலுத்த வேண்டும் என்பதையும், இயல்பை ஒட்டி வாழ வேண்டும் என்பதையும் ஆசிரியர் வலியுறுத்துகிறர். இதுவே ஆசானின் தன்மையாகிறது.