புதன், பிப்ரவரி 16, 2011

'வழி' – 57

'வழி' – 57
செய்யாத வெற்றி

வரம்புகள் இருக்கையில் மீறுதலும் இயற்கையே
மரம்போல் இருக்கையில் இயற்கையோடு ஒன்றுமே

வாதும் சூதும் வன்போருமே செய்தாலும்
சாதுர்யம் புரிந்தே உலகையே வென்றாலும்

பரந்த இவ்வுலகினின் உயிர்களின் மனத்தினில்
நிரந்தர வெற்றியையும் பெற்றிடவே முடியாதே

ஆளும் எண்ணம் இல்லாத காரணத்தால்
ஆசானும் காட்டுவானே நிறைவான வழியதையே

முழுதான வழியதனால் உயர்வடைந்த உயிர்களுமே
தொழுதே வழிபடுமே ஆசானை உள்ளமதில்


**********

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. தடுக்க நினைக்கையிலே எதிர்த்து செயல்பட நினைப்பதும், விரும்புவதும் இயற்கை. அணைபோட்டுத் தடுத்த நதி நீரின் வேகம் அணை உடைகையிலே தெரியும். செயற்கையாகத் தடுக்காமல் இயற்கையோடு ஒன்றி இயல்பாக இயங்குகையில் எதிர்ப்பும் இல்லை, மீறுதலும் இல்லை.

அரசாட்சியில் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆளுகின்ற அரசுகள் அனைத்தும் எதிர்ப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். மாறாக ஒருவர் மனத்திலே இடம் பெற்று விட்டால் அவரின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இயல்போடு இயங்கும் ஆசானும் ஆள வேண்டும் என்று யாரையும் அணுகாத காரணத்தால் எந்நாளும் எதிர்ப்பைச் சந்திக்காமல் வாழ்கிறார். ஆளாமலே மக்களைத் தன்மையால் வென்றுவிடுகிறார்.