சனி, பிப்ரவரி 26, 2011

'வழி' – 58

'வழி' – 58
ஆளும் முறை

நாட்டை ஆளும் அரசுமே பலத்தினால்
வாட்டாமல் மக்களை ஆள்வதும் முறையே

சிலைக்கு வடிவுதரும் சிற்பியின் உளிதானே
குலைத்தே சிதைத்திடுமே அழுத்தம் மீறுகையில்

வாக்கிலே சாதுர்யம் நிரம்பியே இருந்தாலும்
தாக்காமலே பேசிடும் தன்மையை வளர்ப்பாயே

பரிவான ஆசானின் கூரான பார்வையுமே
எரிக்காதே இதனாலே மற்றவரின் மனத்தினையே

வரம்புகள் அறிந்த ஆசானின் ஆற்றலுமே
நிரம்பியே இருந்தாலும் தளும்புவது இல்லையே.


**********

தனி மனித வாழ்வின் உயர்வுக்கு உதவும் தத்துவங்களைத் தந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டை நிர்வகிக்கும் அரசனின், அரசின் அரசாட்சி முறைபாடுகள் சம்பந்தமான தத்துவங்களையும் இந்நூலில் காணலாம். ஒரு அரசின் வீரம், பலம், செல்வம் போன்ற குணங்களைப் பற்றி மட்டும் சொல்லாமல், தனி மனித வாழ்க்கையில் இருக்க வேண்டிய பொறுமை, நிதானம், அடக்கம் போன்ற சாத்வீக குணங்கள் எந்த அளவுக்கு அரசாட்சியிலும் வேண்டும் என்பதை ஆசிரியர் பல இடங்களில் எடுத்துரைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில் வரம்பு மீறிய வன்மை பற்றிக் கூறுகையில், எப்படி சிலை செதுக்குகையில் அழுத்தம் அளவோடு இருக்க வேண்டுமோ அதே போல அரசும் தன் பலத்தை அளவு மாறாமல் பிரயோகிக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். ஒரு அரசனின் செயல்பாடு 'வழி' தத்துவம் உணர்ந்த ஆசானின் செயலை ஒத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.