திங்கள், பிப்ரவரி 28, 2011

வழி - 59

வழி - 59
சிக்கனத்தின் சிலாக்கியம்

இயல்பான இயற்கைவளம் அளவின்றி இருந்தாலும்
செயல்களுக்கு செலவிடவே சிக்கனமும் வேண்டுமே

வரவுக்குள் செலவிருத்தல் சிக்கனத்தின் இலக்கணமே
இரவதனின் இருள்வருமே வரவுமீறிச் செல்கையிலே

உணர்கையிலே வழியுந்தன் மதியதனின் வரவாகும்
உரைக்கையிலே மதியுந்தான் மறைத்திங்கே செலவாகும்

அசைவற்ற மனத்தினிலே வழிஞானம் சேர்ந்திடுமே
ஆசையின் வெளிப்பாட்டில் செலவாகும் வழியிங்கே

சிக்கனமும் வந்திடுமே உரைப்பது குறைகையிலே
சிக்கனம் இருந்தாலே நிறைவதனைப் பெறலாமே

நிறைவாக இருக்கையிலே சோர்விங்கே வாராதே
குறைவின்றி இதனாலே புவியதனை ஆள்வாரே

சிக்கனத்தின் சக்தியதை உணர்ந்த ஆசானை
விக்கினங்கள் இதனாலே நெருங்குவதும் இல்லையே!


**********

"வரவு எட்டணா, செலவு பத்தணா" என்று நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாகக் குறிப்பிடப்படும் சிக்கனம் பற்றிய கருத்தின் பெருமையை வாழ்க்கை "வழி" பற்றி விளக்குகையில் இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். எந்த விஷயத்திலும் வரவையும், செலவையும் புரிந்து கொண்டால், எப்படி சிக்கனத்தை கடைப்பிடித்தால் பலனுண்டாகும் என்பதை அழகாக விவரிக்கிறார். இன்னாளில் இயற்கை வள உபயோகத்திலிருந்து, ஒரு நாட்டுப் பொருளாதாரம் வரை இந்த 'சிக்கனம்' விஷயம் எப்படி முக்கியமானதாகிறது என்பதை நம்மை சிந்திக்க வைக்கிறார்.