சனி, மார்ச் 05, 2011

'வழி' – 61

'வழி' – 61
தாழ்மையின் உயர்வு

வெள்ளமிங்கே விரைந்தோடும் மலையிருந்து மடுவுக்கே
வெப்பமுமே பரவிடுமே தணலிலிருந்து குளிர்நீக்க

வளியுமிங்கே நிறைத்திடுமே தென்றலாக வெற்றிடத்தை
வெளிச்சமும் பரவிடுமே ஒளியிலிருந்து இருள்நீக்க

அறிவிங்கே வளர்ந்திடுமே அறியாமை உணர்ந்தாலே
செறிவும்தான் சேராதே அறிந்தோம் என்றெண்ணமதால்

வெறுமையான பாத்திரமே நீரேந்த உதவிடுமே
பொறுமையான மனமிங்கே நிலையுயர உதவிடுமே

ஏழ்மையான மனத்தாலே நிலையதனில் தாழ்வில்லை
தாழ்மையினால் பெற்றிடலாம் வழியதனின் முழுமையையே!


**********

பணிவின் சிறப்பை எடுத்துரைக்கும் அத்தியாயம் இது. "ஹிட்லர் உமாநாத்" திரைப்படத்தில் மறைந்த நடிகர் சுருளிராஜன் வில்லுப்பாட்டு நடத்துவதாக ஒரு காட்சி வரும். அதில் அவர் "தெரியாதது எதுவோ அதுலதான் நாம முன்னுக்கு வர முடியும்" என்பதை தான் ஆங்கிலம் பேசுவதற்கு காரணமாகச் சொல்லுவார் (திரைப்படத்தில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது). நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட பழமொழியாக இருந்தாலும், அறியாமையை உணர்வதுதான் அறிவைப் பெறுவதற்காக ஒருவர் எடுத்துவைக்கும் முதல் படி. வாழ்வில் உயர்வதற்கும் இதே போல தன்னுடைய நிலையை, தாழ்மையைப் புரிந்து கொள்ளுதல் முதல் பாடம். இதை உவமைகளோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.