வியாழன், மார்ச் 10, 2011

வழி - 62

வழி - 62
மூலத்தின் தன்மை

மூலமான வழியுமே மறைந்திங்கே இருந்தாலும்
நலமான சொத்தாகும் உணர்ந்திங்கே வருவோர்க்கு

தடுமாறித் தேடுவோர்க்கு அடைக்கலமும் தந்திடுமே
தடுத்திங்கே ஆட்கொள்ளும் நிறைவான வழிதானே

ஆள்பவர் மாறுகையில் பொருள்தந்து புகழ்பாடி
கொள்கையை மறந்திங்கே வாழுகின்ற மக்களுமே

நிலையான வழியதனின் தன்மையை மறந்ததனால்
தலைகுனிந்து தரங்குலைந்து வாழுகின்ற நிலைவருமே

வன்மையாய் வசைத்தாலும் இன்மையாகப் புகழ்ந்தாலும்
தன்மையதில் மாறாதே நின்றாளும் இயற்கையுமே

அடைந்தவருக்குப் பொக்கிஷமாய் அடையாதோருக்குப் புகலிடமாய்
தடைநீக்கும் வழியுமே தன்மையில் இயற்கைதானே

மூலமான வழியதனின் நிலைமாறாத் தன்மையினால்
நலமாவும் பெறலாமே நிலைமாறும் புவிதனிலே


**********

அனைத்துக்கும் மூலமான உண்மைப் பொருள் காலம், எண்ணம், மக்கள் பொறுத்து மாறுவதில்லை. இந்த மூலம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. காலத்திற்கேற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் குணம் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. சில நூறு வருடங்களுக்கு முன்னால் சீனாவில் எடுத்துக்காட்டப்பட்ட இந்த நிலையை இன்றும் இவ்வுலகத்தில் காணலாம். மூலத்தை மறந்து சந்தர்பத்தை ஒத்து கொளகையை மாற்றிக் கொள்ளும் மனிதர்களுக்கு வாழ்க்கை குலையும் என்பதை இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.