செவ்வாய், மார்ச் 22, 2011

வழி - 65

வழி - 65
வாழ்க்கையறிவு

இயல்பான வழியொற்றி வாழுகின்ற மக்களின்
செயல்பாடும் பழியின்றி முழுதாக மலர்ந்திடுமே

வேதமான வழியதனை மறந்திங்கே வாழ்கையிலே
பேதங்கள் வினையாக வளர்ந்திங்கே வீழ்த்திடுமே

வாதத்தாலே அறிவதனை வளர்த்த மக்களையும்
சாதுர்யம் காட்டியாளத் தேவையும் வந்ததே

இயற்கையான வழிபற்றி வாழுகின்ற மக்களுக்கே
செயற்கையான சட்டங்களின் தேவையும் இல்லையே

திட்டமான வழியதனை முழுதாக உணர்ந்திடவே
சட்டங்களின் அறிவுமிங்கே தடையாக வந்ததுவே

வழியதினின் வலிவறிந்த ஆசானும் இதனாலே
வழிமறைக்கும் அறிவதனை வளர்ப்பதுவும் இல்லையே.


**********

இனிமையான வாழ்க்கைக்கு அறிவு முக்கியம். ஆனால் எது அறிவு என்று அறிவது அதை விட முக்கியமான ஒன்று. இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் மிக அருமையாக இந்த வித்தியாசத்தை விளக்குகிறார். வீண் வாதத்திற்காக சட்டம் படித்து ஒரு குற்றவாளியை தப்பிக்க உதவும் அறிவையும், அறியாதவர்களுக்கு எளிமையாக விளக்கம் அளித்து புரிய வைக்க உதவும் அறிவையும் ஒன்றாகக் கருத முடியாது. இயற்கையில் ஒன்றி அதன் வழி புரிந்து, விதி தெரிந்து வாழும் மக்களுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான சட்டங்கள் உதவாது; தடையாகி விடும் என்று உரைக்கிறார் ஆசிரியர். இதனாலே முல வழியை அடையத் தடையாக இருக்கும் விஷயங்களை ஆசான் முழுவதுமாக ஒதுக்குகிறார்.