வியாழன், மார்ச் 17, 2011

'வழி' – 64

'வழி' – 64
அசைவின்மை

நிலையான சிந்தையிலே பொருள்யாவும் புரிந்திடுமே
அலைபாயும் மனதினிலே நிம்மதியும் வாராதே

வலிவற்ற மண்வீட்டை குலைப்பதும் சுலபமே
வடிவமும் சிறிதாக மறைப்பதுவும் எளிதாகும்

களைகளும் சுமைகளே அளவிலே வளர்ந்தபின்
முளையிலே அழிப்பதால் பளுவுமே குறையுமே

வனங்களும் வருமிங்கே விதைகளில் வளர்விலே
தனங்களும் பெருகுமே மதியதனின் வளர்விலே

அடியிலே துவங்குமே இமயத்தின் பயணமே
நொடியிலே தொடக்கமே சமயத்தின் கணக்குமே

சலனங்களைத் தவிர்த்தாலே வலிவதனைப் பெறலாமே
பலனதனைப் பெற்றிடவே வலிவுதரும் வழிதானே

பற்றற்ற ஆசானின் 'வழி'யின்படி நடந்தாலே
பெற்றிடலாம் புவியதனின் பொருள்களையும் நிறைவாக.


**********
Every journey begins with a single step. உலகில் அதிகம் உபயோகிக்கப்படும் மேற்கோள்களில் ஒன்று: "நெடுந்தூரப் பயணங்களும் இங்கே (ஒவ்வொரு) அடியாகத்தான் தொடங்குகிறது". இந்த வாக்கியம் இந்த அத்தியாயத்திலிருந்துதான் எடுத்தாளப்படுகிறது.

ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் எப்படி பெரிய விஷயங்கள் சிறியதாகத் துவங்குகிறது என்பதையும், எந்தக் காரணத்தால் சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார். இதே கருத்தை வேறொரு அத்தியாயத்திலும் (வழி 26) அவர் வலியுறுத்தியிருக்கிறார். மனதை அலைய விடாமல் ஒருநிலைப்படுத்தினால் முழுமையை அடையலாம் என்ற கருத்தை பதஞ்சலி யோக சூத்திரத்திலும் காணலாம்.