சனி, மார்ச் 26, 2011

வழி - 66

வழி - 66
பணிவின் உயர்வு

நிலத்திலும் தாழ்வாக கடலிங்கே இருந்தாலும்
உலகத்தின் நதியாவும் கடல்தேடி வந்தடையும்

மூடிய பாத்திரத்தில் நீரேந்த முடியாதே
கூடியே வந்திடுமே திறந்த கலத்தினிலே

தரத்திலே தாழ்வில்லை குணத்திலே பணிவதனால்
வரவும் பெருகிடுமே மனமும் திறந்தாலே

ஓட்டிடுவாய் துயர்களையே திறந்த மனத்தாலே
போட்டிகளும் வாராதே பணிவான குணத்தாலே

போட்டியிடும் மனப்பாங்கு இல்லாத காரணத்தால்
போட்டியிலே தோல்வியெனும் நிலையிங்கு இல்லையே!


**********

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் பணிவின் பெருமையை விளக்குகிறார். பணிவின் பெருமை பற்றி அனைத்து கலாச்சாரங்களிலும் எழுதியிருக்கிறார்கள். இந்த உவமைகளில் சிலவற்றை மற்ற இடங்களில் பார்த்ததாக நினைவு. விளக்கத்திற்கு பதிலாக அடக்கமுடைமை அதிகாரத்திலிருந்து இரண்டு குரள்களைத் தந்திருக்கிறேன்.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.