ஞாயிறு, மார்ச் 27, 2011

வழி - 67

வழி - 67
மும்முத்துக்கள்

தாழ்விங்கே வாராதே வழியின் போதனையால்
வாழ்க்கைக்கு உரமாக வந்ததிங்கே மும்முத்துக்கள்

உயிர்களிடத்து நேசமுடன் போதுமென்ற மனமும்
உயர்வதனைத் தந்திடுமே தன்னடக்கம் சேர்ந்தாலே

நிறைவில்லா மனமும் நேசமில்லா வீரமுமே
குறைத்திடுமே வாழ்க்கையதை தானென்ற நினைப்பிருந்தால்

துணிவிங்கே போதுமே உயிரதனைக் கொன்றிடவே
துணிவோடு முழுமையுமே நேசிக்கத் தேவையிங்கே

பிறரிடத்தில் நேசமது வளர்த்திடுமே உன்னிடத்தில்
சிறந்திடவே வாழ்க்கையிலே துணிவோடு முழுமையையே

போதுமென்ற மனத்தோடு தேவைகளைக் குறைத்தாலே
போருக்கே போகாமல் வாழ்க்கையிலே வென்றிடலாம்

தன்னடக்கம் இருந்தாலே தெரிந்திடுமே குறைகளுமே
தந்திடுமே வாழ்க்கையிலே குறையற்ற முழுமையையே

நிறைவோடு வழிதந்த முத்துக்கள் இம்மூன்றும்
குறைநீக்கி வாழ்க்கைக்கு முழுமைதரும் பொக்கிஷமே.


**********

இது வரை வெவ்வேறு அத்தியாயங்களில் சொன்ன நற்குணங்களில் முக்கியமான மூன்றை இதில் சிலாகித்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர். உயிர்களிடத்து நேசம், போதுமென்ற மனம், தன்னடக்கம். உயிரைக் கொல்வதற்கு வீரம் வேண்டும்; நேசிக்க வீரம் மட்டும் போதாது. நேசம் இல்லா வீரம் நன்மை பயக்காது. போதுமென்ற மனம் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. அறிவதற்கு முக்கியத் தேவை அடக்கம். இந்த மூன்று குணங்களையும் ஆசிரியர் மும்முத்துக்கள் என்று குறிப்பிட்டு முழுமைக்கு இவை மூன்றும் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறார்.