வியாழன், மார்ச் 31, 2011

வழி - 68

வழி - 68
இழப்பில்லா வெற்றி

இழப்பின்றி வாராதே போரிலே வெற்றியுமே
இழப்பில்லா வெற்றிதானே போர்களிலே உயர்விங்கே

இழப்பின் கனந்தெரிந்த வீரர்களும் இதனாலே
இழப்புதரும் போர்தேடிச் செல்வதும் இல்லையே

வன்முறையால் பயமுறுத்தி மக்களை அடக்கினாலும்
நன்முறையால் வெற்றிகொள்ளும் திறமன்றோ சிறந்ததிங்கே

வன்முறையின் துயர்தெரிந்த அரசரும் இதனாலே
வன்முறையைத் துணையாக்கி ஆள்வதும் இல்லையே

மற்றவரின் திறந்சேர்த்து வாழ்ந்திடவே எந்நாளும்
பெற்றிடவும் வேண்டுமே அடக்கமுடன் பணிவையுமே

வாழ்க்கையில் வழிதெரிந்த ஆசானும் இதனாலே
தாழ்மையுடன் பணிவுகாட்டி தவிர்ப்பானே வன்முறையை.


**********

போர், வன்முறை மற்றும் தீவிரவாதம் தரும் தீர்வெல்லாமுமே இழப்பில்லாமல் வருவதில்லை. இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் எவருமே போரை விரும்பிச் செல்வதில்லை. 'வழி' தத்துவத்தில் ஆசிரியர் போர் மற்றும் வன்முறையின் தீங்கை அனேக இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார். போர் இழப்போடு வெற்றியைத் தரலாம். ஆனால் பணிவு எப்போதுமே இழப்பில்லாத வெற்றியை அவசியம் தருகிறது என்பதை ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார்.