ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

'வழி' - 71

'வழி' - 71
அறிவின் வலிவு

அறிவன்றோ வலுவாகும் அறியாமை பிணியாகும்
அறிவிங்கே வந்தாலே அறியாமை விலகிடுமே

அறிவை மறந்தாலே வலுவிங்கே விலகிடுமே
அறியாமை அறிந்தாலே பிணியதனை விலக்கிடலாம்

வழியறிவும் பிணிவலியும் புரிந்த ஆசானும்
பழியில்லா அறிவாலே அறியாமை விலக்கிடுவான்.

அறிவையும் அறிவாலே அறிந்த காரணத்தால்
அறியாமைப் பிணியிவனை எந்நாளும் அருகாதே.


**********

நம் உடலுக்குப் பிணி வந்தால் அதை நீக்க எந்த அளவுக்கு நாம் முயல்கிறோமோ, அந்த அளவுக்கு அறியாமை என்ற பிணியை நீக்கவும் முயல வேண்டும். ‘அறியாமையே ஆனந்தம்’ – Ignorance is Bliss - என்றெண்ணும் மக்களுக்கிடையே, அறியாமையினால் வரும் துயர் புரிந்தவர்கள், அறிவை நாடிச் செல்வர். இதிலே அறிவை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அறிவைத் தேடிச் செல்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். அறிவையே அறிந்து கொள்வது எளிதன்று; அப்படி அறிந்தவர்களை அறியாமை என்றும் அணுகாது. பத்திரகிரியார் பாடல் நினைவுக்கு வருகிறது:

அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம்?

அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஎனி எக்காலம்?