செவ்வாய், ஏப்ரல் 12, 2011

வழி – 72

வழி – 72
பயமில்லா வியப்பு

வலிவுகண்டு பயந்தாலே வலிவில் முழுமையில்லையே
வலிவுகண்டு வியந்தாலே முழுமையிங்கு வந்திடுமே

பயத்தினைத் துணையாக்கி மக்களை ஆளுகையில்
பயந்த மக்களுமே இழப்பாரே பொக்கிஷத்தை

இழப்பதற்கு வேறொன்றும் இல்லையென்ற பொழுதினிலே
இழப்பாரே பயத்தினையே போராடும் மக்களுமே

பயமென்றும் புவியதனில் நிலைத்தேதான் இருக்காதே
பயம்தந்த வீரமிங்கே எதிர்ப்பினிலே துவண்டிடுமே

பயமில்லை மக்களுக்கே வழிபுரிந்தோர் ஆளுகையில்
பயமில்லா ஆட்சியிங்கே எதிர்ப்பதனைக் காணாதே

வழியதனின் சக்தியதில் வலிவுண்டு பயமில்லை
வழியதனின் சக்தியதின் வியப்பினிலே முழுமையுண்டு

முழுமையின் பொருளறிந்த ஆசானும் இதனாலே
தழுவிடுவான் பயமின்றி வியப்பான வழிதனையே.


**********

வலிமையின் வெளிப்பாட்டினால் பயமும் வரலாம்; வியப்பும் வரலாம். அலைகளின் உதவியால் மின்சாரம் தருவிக்கையில் வரும் வியப்பு, அதே அலை சுனாமியாக நாட்டினுள் வரும் பொழுது பயமாகிறது. வீரத்தை வன்முறைக்குத் துணையாக்கி மக்களை பயமுறுத்தி ஆண்ட அனைத்து அரசுகளும் பின்னாளில் எதிர்ப்பால் அழிவையே அடைந்திருக்கின்றன. அதே சமயத்தில் மக்கள் வலிவை வியந்து பார்க்கையில் அந்த வலிவை ஏற்றுக் கொள்வதால் வலிவு காட்டுபவர்களை எதிர்ப்பதில்லை. இந்த வியத்தலே முழுமைக்குக் காரணம் என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

எழுத்தாளர் பாலகுமாரனின் 'இரும்பு குதிரைகள்' கதையில் வந்த பாடல் நினைப்புக்கு வருகிறது:
"வெறுப்புடன் பிறந்த மாக்கள் பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரை கொம்பில்லை, விஷமுமில்லை"