புதன், ஏப்ரல் 20, 2011

வழி - 74

வழி - 74
மரண பயம்

மரணபயம் இல்லாத மனிதர்களை எந்நாளும்
மரணத்தைக் காட்டியே அடக்கவும் முடியாதே

நேரத்திலே விதிமுடிக்க காரணனும் இருக்கையிலே
கோரமான சதியால்வரும் மரணமிங்கே பிழைதானே

திறமிக்க சிற்பிக்கு உதவும் உளிதானே
கரத்தையே சிதைத்திடுமே பொறுப்பற்ற வீச்சினிலே

காரணம் புரிந்திடவே வாழுகின்ற உயிர்களையே
மரணத்தால் முடிப்பதனால் இழப்பன்றோ மிஞ்சுமிங்கே!


**********

வன்முறையில் கொடூரமானது உயிர்க்கொலை. வன்முறையின் தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக எழுதப்பட்ட மற்றுமொரு அத்தியாயம் இது. பிறந்த உயிர்களனைத்தும் இறப்பது நிச்சயம். இது இயற்கையால் நடத்தப்படுவது. அதை மனிதர் தம் செயலால் செய்வித்தால் அது இயற்கைக்கு எதிரான, பொறுப்பற்ற செய்கையாகிறது. உயிர்களனைத்தும் ஏதாவதொரு நோக்கத்தை, காரணத்தையொத்துப் பிறந்திருக்கின்றன. அந்த நோக்கம் நிறைவேறும் முன்பாக, காரணம் புரியும் முன்பாக மரணத்தை சந்திக்க வைப்பது தவறு என்கிறார் ஆசிரியர். அதேபோல, மரணபயம் துறந்தவர்களை, மரணத்தைக் காரணமாகக் காட்டி பயமுறுத்தி ஆள்வது நடவாத செயல் என்கிறார் ஆசிரியர்.