ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

வழி - 75

வழி - 75
வரியின் தாக்கம்

வரியதனை உணவாக்கி வளர்கின்ற அரசுமே
பெரிதாகி மக்களின் உணவதனைக் கவர்ந்திடுமே

வரிகளையும் வரம்பின்றி ஆள்பவரும் விதித்தாலே
புரிவாரே தரம்தாண்டிய செயல்களையே மக்களுமே

இழப்பதற்கு பொருளேதும் இல்லாத நிலைதனிலே
இழக்கவே துணிவாரே உயிரையுமே மனிதருமே

இறக்கவே மனிதருமே துணிவாக இருக்கையிலே
துறக்குமே அரசுமே அரசாளும் உரிமையதை.


**********

மனதை ஆளும் வழிகளைப் பற்றி ஆசிரியர் பெரும்பான்மையான அத்தியாயங்களில் விளக்கியிருந்தாலும், மக்களை ஆளும் முறை பற்றியும் அனேக அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார். அம்மாதிரியான அத்தியாயங்களில் இதுவும் ஒன்று. அரசாங்கம் நடத்தப் பொருள் வேண்டும். அது வரிகள் மூலமாக வருகிறது. அதே சமயத்தில் வரும் பொருளின் மேலுள்ள மோகத்தால் அளவுக்கு மீறி வரிகளை விதிக்கையில், மக்களும் தரம் குறைந்த செயல்களை செய்யத் தொடங்குவார்கள். முடிவில் உயிருக்கும் துணிந்து அரசையே எதிர்த்துக் கவிழ்ப்பார்கள் என்கிறார் ஆசிரியர். வரலாற்றில் அன்னாளிலும் இதைப் பார்த்திருக்கிறோம்; இன்னாளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!