ஞாயிறு, மே 01, 2011

'வழி' - 76

'வழி' - 76.
மென்மையின் வலிவு

பிறக்கையிலே உயிரனைத்தும் தன்மையிலே மென்மைதானே
இறந்ததுமே விரைத்துத்தான் இழந்திடுமே தன்மையதை

வாழுமிங்கே கொடிசெடியும் தண்ணீரின் மென்மையாலே
வீழ்ந்திடுமே கருகிப்பொடியாக மென்மையின்றி உலர்ந்தாலே

வலிவான மரங்களிங்கே புயலிலே விழுகையிலே
மெலிவான புல்லுமிங்கே வீழாமல் வளர்ந்திடுமே

இப்புவியில் உயிர்தழைக்க தேவையே மென்மைதானே
தப்பிதமாய் வலிவதனை தேடியேநீ போவதேனோ?


**********

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் மென்மையின் உயர்வையும் வலிவையும் விளக்கியிருக்கிறார். பிற உயிர்களிடத்து நேசமும், பரிவும் முக்கியமான குணம் என்று வேறொரு அத்தியாயத்தில் வலியுறுத்தியது போல (வழி 67) வலிவையும், பலத்தையும் மட்டுமே பிரதானமாகத் தேடுவது போதாது என்று உரைக்கும் விதமாக, தன்மையில் மென்மை வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். உயிர்களின் இயல்பான குணமாக மென்மை இருக்கிறது; அந்த இயல்பை இழக்கையில் உயிரும் நீங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் மென்மையின் உயர்வும், அதன் தேவையும் புரிந்து விடும் என்கிறார் ஆசிரியர்.