வியாழன், மே 05, 2011

வழி - 77

வழி - 77
சமனாக்கும் வழி

நாணேற்றிய வில்லதனில் துருவங்கள் நெருங்கிடுமே
வீணேதான் அம்பிங்கே நாணேற்றா வில்லினிலே

சிகரத்தில் பனியாக உறைந்த தண்ணீரும்
நகரத்தின் மனிதருக்கு இறங்கியே பாய்ந்திடுமே

நிலத்தடியில் ஊற்றாக மறைந்திருக்கும் நீருமிங்கே
நிலமதனை வளமாக்க மேலேறி வந்திடுமே

துருவங்கள் நெருங்கினாலே குறைகளும் நிறைவாகும்
பருவங்கள் மாறுகையில் பயணங்கள் சுவையாகும்

ஏற்றிடுமே இறங்கியதை இயற்கையின் வழிதானே
ஏற்றங்களை இறக்குவதால் புவியிங்கே சமனாகும்

சமனாக்கும் தன்மையதை இயல்பிலே பெற்றதினால்
எமனுக்கும் தருகின்றான் வழியொத்த ஆசானும்.


**********

கால ஓட்டத்தில் இயற்கை அனைத்தையும் சமனாக்குகிறது. மலைகள் சமவெளிகளாவதும், ஏரிகள் வற்றி நிலமாவதும், நிலங்கள் மூழ்கி கடலாவதும் இயற்கையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இம்மாதிரியான மாற்றங்களே தாவரங்களும், உயிரினங்களும் வளர உதவுகின்றன. இந்த சமனாக்கும் தன்மையை மக்கள் உணர்ந்து ஏற்றத் தாழ்வுகளை நீக்க முயல வேண்டும் என்கிறார் ஆசிரியர். இயற்கையின் சக்தியான இந்த தன்மையை ஒத்து வாழ்பவர்கள் உயர்வடைவார்கள் என்கிறார்.