வெள்ளி, மே 13, 2011

வழி – 78

வழி – 78
நீரின் வழி

வலிவான புவியதனின் திடமான பொருளாவும்
மெலிதான நதிநீரின் வெள்ளத்தில் பொடியாகும்

கழிகொண்டே அடித்தாலும் மலையதனால் தடுத்தாலும்
சுழித்தோடும் நதியதனின் இயல்பிங்கே மாறாதே

கலக்கின்ற பொருளோடு கடலிலே சங்கமிக்கும்
நலமான வழியதினின் தன்மையொத்த இயல்பாலே

மென்மையான வழியதனின் வலிவறிந்த ஆசானும்
தன்மையோடு புவியதனின் துயர்களையே ஏற்பானே

தட்டாமல் தருகின்ற பக்குவம் பெற்றதனால்
கேட்பவரை நதிபோல வழிக்கடலில் சேர்ப்பானே.


**********

மென்மையின் வலிமை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆசிரியர் வேறு இடங்களிலும் விளக்கியிருக்கிறார் (வழி 67, வழி 76). அந்தக் கருத்தை தண்ணீரை உவமையாகக் கொண்டு இந்த அத்தியாயத்தில் மீண்டும் வலியுறுத்துகிறார். எப்படி நதி நீர் தன்னோடு கலக்கும் பொருட்களைக் கடலில் கொண்டு சேர்க்கிறதோ, அதே போல ஆசானும் தன்னையடைந்தவர்களை வழிக்கடலில் கொண்டு சேர்க்கிறான். நதியின் பண்பை ஒத்திருப்பதால், தாக்குதல்களால் அவன் காயமடைவதில்லை.